தூய ஜெயராக்கினி அன்னை ஆலயம்

இடம்: தொட்டியம், தொட்டியம் தாலுகா, 621215

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: லால்குடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித சூசையப்பர் ஆலயம், தோளூர்பட்டி

2. புனித அந்தோனியார் ஆலயம், தலைமலைப்பட்டி

3. புனித சவேரியார் ஆலயம், சேர்வைக்காரன்பட்டி

4. அற்புத குழந்தை இயேசு ஆலயம், காட்டுப்புத்தூர்

5. புனித இரபேல் அதிதூதர் ஆலயம், கொளக்குடி

6. புனித சகாய அன்னை ஆலயம், ஏரிக்குளம்

7. புனித உத்தரிய அன்னை ஆலயம், அரசலூர் 

ஆலயம் இல்லாத கிளைப்பங்குகள்

1. மஞ்சமேடு

2. சத்திரம்

3. மருதம்பட்டி

4. நாகையநல்லூர்

5. M. களத்தூர்

6. ஏலூர்பட்டி

குடும்பங்கள்: 350+

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 06:00 மணி

புதன் மாலை 06:00 மணி தூய ஜெயராக்கினி மாதா நவநாள் திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 06ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை.

வரலாறு:

1864 ஆம் ஆண்டு கோட்டப்பாளையம் பங்கில் இருந்து பிரிந்து, தோளூர்பட்டி தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. அப்போது தோளூர்பட்டி பங்கின் கிளைப் பங்காக தொட்டியம், நாமக்கல், மோகனூர், புதன்சந்தை, கொசவம்பட்டி, 

கால்காவேரி (காக்காவேரி) ஆகியன செயல்பட்டு வந்தன.

நன்கொடையாளரின் உதவியுடன், நிலம் சாகுபடி செய்ய 21.04.1946 அன்று கிணறு வெட்டப்பட்டது.

தோளூர்பட்டி பங்குத்தந்தையாக அருட்பணி. V. S. லூர்து சேவியர் அவர்கள் 1948-1955 வரை பணியாற்றிய போது, தொட்டியம் ஆலயத்தையும் சிறப்புற கவனித்து வந்தார். பின்னர் பூண்டி மாதா பசிலிக்காவிற்கு பணிமாற்றம் பெற்று சென்று, பூண்டி மாதாவின் புகழை பாரெங்கும் எடுத்துச் சென்றார்.

1956 ஆம் ஆண்டு தொட்டியம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. தோளூர்பட்டி ஆலயமானது தொட்டியம் பங்கின் கிளைப் பங்காக மாற்றப் பட்டது. அருட்பணி. பால் இருதயம் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

அருட்பணி. சுவாமிநாதர் பணிக்காலத்தில் (1962-1964) புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி துவக்கப் பட்டது.

அருட்பணி. A. சாந்தப்பர் பணிக்காலத்தில் (1964-1969) புனித ஜெயராக்கினி மாதா ஆலயத்திற்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு D. பவுல் அருள்சாமி அவர்களால் 15.03.1964 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 16.04.1966 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் பங்குத்தந்தை இல்லம், 1966-ல் அருட்சகோதரிகள் இல்லம் ஆகியன கட்டப்பட்டது.

அருட்பணி.‌ L. குழந்தை சாமி பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் மற்றும் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி ஆகியோரால் 23.02.2017 அன்று புனிதப் படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பரமானந்த சுவாமிகள்:

Rev.Fr. Antoine De Proenca (பரமானந்த சுவாமிகள்) போர்ச்சுக்கல் நாட்டின் இரமேலா என்னும் ஊரில் பிறந்தார். 1643 ஆம் ஆண்டு இயேசு சபையின் குருவாகி, 1647 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து 'மதுரை மிஷன்'-ல் பணிபுரிந்தார். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பணிசெய்த பரமானந்த சுவாமிகள், 1663 முதல் 1665 வரை தொட்டியம் பகுதியில் நற்செய்திப் பணியாற்றினார். 42 ஆண்டுகள் நற்செய்திப் பணியாற்றியவர் 14.12.1686 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அவரது உடல் காவிரிக்கரையின் தென்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஆலய வளாகத்தில் கல்லறை அமைக்க, ஊர் மக்கள் ஒன்றிணைந்து அவரது உடலை தோண்டி எடுத்த போது, உடல் அழியாமல் இருந்ததைக் கண்ட, பிறமதத்தினரும் அவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு மன்றாட ஆரம்பித்தனர். பின்னர் மகேந்திரமங்கலம் என்னும் கிராமத்தின் காகித ஆலைக்கு மேற்புறத்தில் உள்ள நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்தனர்.‌ கல்லறைக்கான 29 சென்ட் நிலத்தின் பட்டாவானது "சர்வேஸ்வரன் கோவில் பட்டா" என்ற பெயரில் உள்ளது.

தலைமலை:

தொட்டியத்தில் இருந்து சுமார் 5கி.மீ தொலைவில் நாமக்கல் மாவட்டம் செவிந்திப்பட்டியை ஒட்டியுள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி தான் தலைமலை. இங்கு வனத்துறை கட்டியுள்ள சிறிய நீர்த்தேக்கம் அருகே, பாறைகளால் அமைந்த மலைக்குகை ஒன்று உள்ளது. இக்குகையில் 1948 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதன் முதல், புனித வெள்ளி வரை 40 நாட்களுக்கு தங்கி இரவும் பகலும் தவமிருந்தவர் தான் தலைமலை வாழ் தவமுனி அந்தோணிசாமி. இவர் விழித்திருக்கும் போதெல்லாம் குச்சியால் செய்த சிலுவையை கையில் வைத்துக் கொண்டு, இயேசுவின் சிலுவைப் பாடுகளை தியானித்து ஜெபித்துக் கொண்டிருந்தார். இவரது தவத்தைக் கண்ட மக்கள் தோளூர்பட்டி பங்குத்தந்தை அருட்பணி.‌ லூர்து சேவியர் அவர்களிடம் தெரிவித்துள்னர். 1983 ஆம் ஆண்டு சகோதரர் இ. சூசைநாதன், அருட்பணி. சொலோனாராயன் ஆகியோர் இந்தக் குகைக்குச் சென்று ஜெபம் செய்தனர். 

திருத்தந்தை இரண்டாம் சின்னப்பர் அவர்களின் ஆசியுடன் 1990 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதா சுரூபமானது, 1992 ஆம் ஆண்டு மலையின் அடிவாரத்தில் இருந்து குகைக்கு திருப்பவனியாக கொண்டு செல்லப் பட்டது. மேலும் 1990 ஆம் ஆண்டு தொட்டியம் பங்குத்தந்தை அருட்பணி. தாவீது அவர்களால் இங்குள்ள மற்றுமொரு சிறிய குகையில், புனித அந்தோனியார் சுரூபம் வைக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

இவ்விடத்தில் சென்று ஜெபிப்பவர்களுக்கு இறைவன் எண்ணில்லா வரங்களை நல்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை பங்கு மக்கள், சுற்று வட்டாரங்களில் உள்ள பங்கு இறைமக்களுடன் இணைந்து, தலைமலைக்கு திருப்பயணம் மேற்கொண்டு, திருச்சிலுவைப்பாதையும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

பங்கின் பள்ளிக்கூடங்கள்:

1. St Mary's High school

2. St Mary's Primary School

3. St. Joseph Middle school, Tholurpatti

4. Infant Jesus Matriculation School, Kattuputhur

மரியின் ஊழியர் சபை (Servite Convent) அருட்சகோதரிகள் இல்லம் உள்ளது.

வழித்தடம்: திருச்சியில் இருந்து சேலம் பெங்களூரு சாலையில், திருச்சியில் இருந்து 55கி.மீ தொலைவில் தொட்டியம் அமைந்துள்ளது.

திருச்சி -சேலம், நாமக்கல் செல்லும் அனைத்து பேருந்துகளும் தொட்டியம் வழியாகச் செல்லும்.

Location map: Our Lady of Victory Church

https://maps.app.goo.gl/mxPzicxRwMbhJCVR6

நாள்தோறும் தம்மை நாடிவரும் அன்பர்களை, நானிலம் போற்ற வாழச் செய்யும், தொட்டியம் தூய ஜெயராக்கினி அன்னையிடம் வாருங்கள்.