புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் 

இடம் : மிக்கேல்பட்டி (மைக்கேல்பட்டி) 

மாவட்டம் : தஞ்சாவூர் 

மறைமாவட்டம் : கும்பகோணம்

மறைவட்டம் : மிக்கேல்பட்டி

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. புனித அந்தோணியார் ஆலயம், அன்புநகர் 

2. புனித சவேரியார் ஆலயம், செந்தலை 

3. புனித சவேரியார் ஆலயம், கண்டமங்கலம் 

4. புனித சூசையப்பர் ஆலயம், அம்மையகரம் 

5. புனித காணிக்கை மாதா ஆலயம், கழுமங்கலம் 

6. புனித சவேரியார் ஆலயம், அடஞ்சூர் 

7. புனித செபஸ்தியார் ஆலயம், மோசஸ்புரம் 

8. வியாகுல மாதா ஆலயம், பழமார்நேரி

9. புனித சவேரியார் ஆலயம், பழமார்நேரி 

10. புனித சவேரியார் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி

11. நடுப்படுகை (ஆலயம் இல்லை, இல்லத்தில் திருப்பலி) 


குடும்பங்கள் : 400 (கிளைப்பங்குகள் சேர்த்து 928)

அன்பியங்கள் : 12

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.00 மணி மற்றும் காலை 08.30 மணிக்கு திருப்பலி. 

திங்கள், புதன், சனி திருப்பலி : காலை 06.00 மணிக்கு 

செவ்வாய், வியாழன் மாலை 06.30 மணிக்கு திருப்பலி. 

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி. 

மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு கல்வாரி கெபியில் திருப்பலி, குணமளிக்கும் ஜெபம். 

திருவிழா : செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதிக்கு அடுத்து வருகிற சனி, ஞாயிறு. 

வழித்தடம் : பூண்டி -மிக்கேல்பட்டி

தஞ்சாவூர் -திருக்காட்டுப்பள்ளி வழித்தடத்தில் மிக்கேல்பட்டி அமைந்துள்ளது.

Location map : 

St. Archangel Michael's Church, Michael Patty

12, Michaelpatti, Tamil Nadu 613104

https://maps.app.goo.gl/gfpy9w9EZyuHZWxN7

வரலாறு :

கி.பி 1643 ஆம் ஆண்டு தொடங்கி 16 ஆண்டுகள் இயேசு சபைக் குருக்கள் தஞ்சை நகரில் பணித்தளம் அமைத்து, மைக்கேல்பட்டி பங்கின் தற்போதைய கிளைக் கிராமமாகிய கண்டமங்கலத்தில் இறைப்பணி செய்து வந்துள்ளார்கள். இயேசு சபை குருக்கள் எழுதி வைத்துள்ள மடல்களிலிருந்தும், அருட்பணி. ப்ளூஷேர் லோனே என்கிற அப்போஸ்தல வேதபோதக மறைப்பணியாளர் எழுதியுள்ள குறிப்பிலிருந்தும் இதை அறிந்து கொள்ள முடிகிறது. 

புனித சவேரியார் கண்டமங்கலம் கிராமத்தில் தங்கி இறைப்பணியாற்றி, மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்ததாக அருட்பணி. ப்ளூஷேர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

கி.பி 1700 ஆம் ஆண்டுக்கு முன்னர் மைக்கேல்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 27 கிராமங்களில், கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன என அருட்பணி. ரியாக்கோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

1899 ஆம் ஆண்டு கும்பகோணம் மறைமாவட்டம் உருவாகும் முன்பே, 1851 ல் புதுவை -கடலூர் பேராயர் பொன்னாந்து அவர்களால், மைக்கேல்பட்டி ஒரு பங்காக உயர்த்தப்பட்டது. அப்போது அருட்பணி. பிரிசார்து அவர்கள் அந்தலி என்ற கிராமத்தில் தங்கி, மைக்கைல்பட்டியில்  பங்கு ஆலயத்தை கட்டத் துவங்கினார். 

அருட்பணி. ஜெரே (ஆனந்தநாதர்) அவர்கள் 1855 ல் பங்கின் பொறுப்பேற்று, மைக்கேல்பட்டியில் தங்கி பணியாற்றினார். 1858 ஆம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 

02.11.1859 அன்று புதுவை மாதா இருதயக் கன்னியர் சபையினர், தங்களது கன்னியர் இல்லத்தை இங்கு நிறுவி விதவைகளை பராமரிக்கும் பணியை செய்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அருட்பணி. ரியாக்கோ அடிகளாரின் காலத்தில் மகளிர் பள்ளியையும், ஏழை மாணவியர் இல்லமும் தொடங்கி நடத்தி வந்தார். 

1901 இல் அருட்பணி. ரியாக்கோ அடிகளார் இறைவனடி சேர்ந்த போது, அவரது உடல் மைக்கேல்பட்டி ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1913 ஆம் ஆண்டு வரை அந்நிய வேதபோதக சபை குருக்கள் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தார்கள். 

மைக்கேல்பட்டி பங்கில் பணிப் பொறுப்பேற்ற முதல் தமிழ் அருட்பணியாளர் என்கிற பெருமை அருட்பணி. ஞானாதிக்க நாதர் (1913-1929) அவர்களையே சாரும். முன்பு இருந்த பங்கு ஆலயம் பெரு வெள்ளத்தால் சேதமடைந்த காரணத்தாலும், ஆலயத்தின் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் 1914 ஆம் ஆண்டில் புதிய ஆலயத்திற்கு அடித்தளம் இடப்பட்டு, 1919 ஆம் ஆண்டில் அருட்தந்தை அவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் கட்டி முடித்தார். 

புதிய ஆலயமானது கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு ஷப்பூயி அவர்களால் 07.09.1919 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26, 27, 28, 29 ஆகிய நாட்களில் ஆலய நூற்றாண்டு விழா பங்குத்தந்தை அருட்பணி. J. அந்தோணி ஜோசப் அடிகளார் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது. நூற்றாண்டு விழா நினைவு கொடிமரம் வைக்கப்பட்டு மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

நற்கருணை ஆலயம்:

அருட்பணி. அகஸ்டின் பணிக்காலத்தில் St. Joseph's Divine Power House கட்டப்பட்டு அப்போதைய ஊட்டி மறைமாவட்ட ஆயர் மேதகு A. அனந்தராயர் அவர்களால் 24.05.2000 அன்று அர்ச்சிக்கப் பட்டது. பின்னர் ஆண்டவரின் திருப்பிரசன்ன ஆலயம் என்ற பெயரில், பங்குத்தந்தை அருட்பணி. J. அந்தோணி ஜோசப் அவர்களின் வழிகாட்டுதலில், அருட்தந்தை. A. ஸ்தனிஸ்லாஸ் அவர்களின் நினைவாக, 

அவரது குடும்பத்தினரால் புதுப்பிக்கப்பட்டு, மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. அமிர்தசாமி அவர்களால் 21.08.2020 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

கல்வாரி காட்சியகம் ஒன்று கட்டப்பட்டு, இறைமக்களின் விசுவாச வாழ்விற்கு துணை நிற்கின்றது.

புனித மிக்கேல் அதிதூதர் மக்கள் மன்றம் என்ற பெயரில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. 

குருசடி:

புனித மிக்கேல் அதிதூதர், புனித ஆரோக்கிய மாதா, புனித அந்தோனியார் சுரூபங்களைக் கொண்டு மக்களின் ஜெபதேவைக்கு இக்குருசடி துணை நிற்கின்றது. 

மிக்கேல்பட்டியில் உள்ள சிற்றாலயங்கள்:

1. புனித சந்தியாகப்பர் சிற்றாலயம்

2. புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம்

3. புனித செபஸ்தியார் சிற்றாலயம்

4. புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயம்

5. புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயம்

6. குழந்தை இயேசு சிற்றாலயம்

7. புனித அருளானந்தர் சிற்றாலயம் 

8. புனித தோமையார் சிற்றாலயம். 

மரியாயின் மாசற்ற திருஇருதய சபை இல்லம் :

இந்த சபை அருட்சகோதரிகள் 

Sacred Heart higher Secondary School, Scared Heart Primary School ஆகிய பள்ளிக்கூடங்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். 

மேலும் புனித ஞானப்பிரகாசியார் தொடக்கப்பள்ளி, மிக்கேல்பட்டி

புனித சவேரியார் தொடக்கப்பள்ளி, பழமார்நேரி  ஆகிய பள்ளிக்கூடங்களும் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

மரியாயின் சேனை:

பிரசீடியங்கள் (13)

ஆண்கள் 1

பெண்கள் 2

பாலர் பிரசீடியங்கள் 2

கிளைக்கிராமங்கள் 8.

மரியாயின் சேனை தொடங்கிய நாள்

20-07-1947 ஆகும். 

புனித வின்சென்ட் தே பவுல் சபை (1):

அன்பு இல்லம் 3 வது ஆண்டாக தினமும் தேர்ந்தெடுக்கப்பட்ட

25 கைவிடப்பட்டோருக்கு மதிய, இரவு உணவு வழங்கி வருகிறது.

திரு. அருள் (Retd. BHEL) அவர்கள் பங்குத்தந்தையின் ஆசீரோடு தனது சொந்த வருமானத்திலிருந்து இதை செய்து வருகிறார். மேலும் நன்கொடை கொடுப்பவர்களிடமிருந்து உதவியையும் பெற்று நடத்தி வருகிறார்.

இவ்வாறு பழைமையும், பல்வேறு சிறப்புகளையும் உடைய மிக்கேல்பட்டியிலிருந்து பல அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் பல்வேறு மறைமாவட்டங்களில் மறைப்பரப்பு பணியாற்றி வருகின்றனர். மேலும் இறைமக்களில் பலர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் மிக்கேல்பட்டி புனித மிக்கேல் அதிதூதர் மீது மிகுந்த பற்றுதலும், இறைவன்பால் உறுதியான விசுவாசத்துடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. திருவிழா காலங்களில் தவறாமல் கலந்து கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து  விழாவை சிறப்பாக நடத்துவது தனிச்சிறப்பு. 

புனிதரின் பரிந்துரையால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வருவதால், நாள்தோறும் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான இறை மக்கள் இவ்வாலயத்தை நாடி வருகின்றனர். நீங்களும் வாருங்கள்..! அதிதூதரின் வழியாக  அற்புதங்களை பெற்று அகமகிழுங்கள்..